அந்தக் காலத்துக்காரர்

Published

2 ஜூலை, 2025

Topic

கவிதைகள்

எதற்கெடுத்தாலும்
அந்தக் காலத்தை இழுப்பவர்
ஒரு பாவப்பட்ட காதலனிடம்
நீயெல்லாம் என்ன மயிரைக் காதலிக்கிறாய்
அந்தக் காலத்தில் நாங்கள்
பாலை நக்குகிற பூனையைப் போல
ஒருவருடைய இதயத்தை 
ஒருவர் நக்குவோம் என்றிருக்கிறார்
இந்தக் கால காதலனுக்கு
கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது
பின் இந்தக் காலத்தில் 
என்ன இழவுக்கு வாழ்கிறீர்கள்
உங்கள் பழைய காலத்துக்கே
திரும்பிப் போய் 
சாக வேண்டியதுதானே என்றிருக்கிறான்
அந்தக் காலத்துக்காரரின்
கண் கலங்கிவிட்டது
கிழகு தட்டிய அந்தக் காலத்தை  
தன் பழைய கருப்பு வெள்ளைக் கண்களால் தேடினார்
அத்தருணம் அலையும் மேகத்தில்
தன்னந் தனியாக ஒரு பறவை 
அந்தக் கால மேகத்தில்
இந்தக் கால சிறகுகளுடன் பறந்து கொண்டிருந்தது
அந்தக் காலத்துக்காரர் நினைத்தார்
இரு காலங்களின் நடுவே
பிறந்தவனுடைய உடல் வேறு
ஆன்மா வேறென்று
அந்தக் காலத்து உடல் பூமிக்கு வெளியே ஒரு செடி
இந்தக் காலத்து ஆன்மா இறந்த கடலடி மீன் 
மேலும் இந்தக் காலத்துக்காரர்களிடம்
பழைய காலத்தின் ஒரு சொல்லையும் உதிர்க்கக்கூடாது
தாய்ப்பாலின் விலையை
ரூபாய் நோட்டில் கணக்கிடுபவர்களிடமும்
கூலிக் கொலையாளிகளிடமும் 
ஜாக்ரதையாக இருக்க வேண்டும்
குத்தீட்டியில் கிழிக்கப்படும்
வேட்டை மிருக மாமிசத்திற்கீடாக
பண்டைய கால தொல் சொற்களை
ஒவ்வொரு கணத்தின் ரத்தத்திலும் தொட்டு
காலாதீதற்கு அதிபதியாக விளங்கும்
மகா மர்மத்திற்கும் ஒளிப்பிட ரகசியதற்கும்
காதலியான கவிதையின்
மூலிகை பூசிய 
புராதன உடலில் பதுக்கிக் குளிரூட்ட வேண்டும்
பின் கண்ணயர்ந்து 
காலத்துக்கும் நிலத்தைப் பண்படுத்தும் 
வேலையே கதியென நெளியும்
மண் புழுக்களோடு தூங்கியபடியே
இந்தக் காலத்துக் கண்களிடம்
புறாக்கள் கொத்தும் தானிய மணியாக வேண்டும்


 

©2025 பாலை நிலவன்

©2025 பாலை நிலவன்